இயக்குனர் இமயம் பாரதிராஜா உடல்நலக்குறைவால் இன்று காலை மறைந்தார். இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் காலை முதல் அஞ்சலி செலுத்தி வந்தனர். அந்த வரிசையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இன்று பாரதிராஜாவுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் பல உருக்கமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில், “பாரதிராஜா எனக்கு 50 ஆண்டு கால நண்பர். அவரது திறமையை பற்றியும் சாதனையைப் பற்றி அனைவருக்குமே தெரியும். சினிமா துறையில் பல இயக்குனர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் அறிமுகப்படுத்தி இருக்கிறார். அவரை வாழ வைத்த இந்த திரையுலகத்தை வாழ வைத்தவர் தான் பாரதிராஜா.
அது மட்டும் அல்ல இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என திரைத்துறையில் யாருக்கு என்ன ஒரு பிரச்சனை என்றாலும் முதல் ஆளாக குரல் கொடுத்து போராடியவர் பாரதிராஜா. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவர் படைப்புகளை யாராலும் மறக்க முடியாது என்றும் தமிழ் மக்கள் இதயங்களில் இருக்கும்.
தனிப்பட்ட வகையில் அவர் ஒரு குழந்தை மாதிரி. அவரது மனதில் என்ன இருக்கோ அதை வெளிப்படையாக அப்படியே சொல்லிவிடுவார். என்னையும் அதிகமாக விமர்சிச்சி இருக்கார். உன்னை எனக்கு பிடிக்கும், ஆனால் உன் நடிப்பை எனக்கு பிடிக்காது என கூறுவார். அவருடன் இருந்தாலே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். எம்ஜிஆர், கலைஞர், சிவாஜி என பலருடன் மிக நட்புடன் அன்புடன் இருந்தவர்.
அவரை நேரில் பார்க்க வரலாம் என கேட்டுக்கொண்டே இருந்தேன். ஆனால், இன்னும் கொஞ்சம் நாள் சரியாகி விடுவார், அப்போ வாங்க என சொல்லிட்டே இருந்தாங்க. அவரை கடைசி நேரத்தில் கூட பார்க்க முடியாமலேயே போய்விட்டது. என்றென்றும் என் நினைவில் அவர் என் கூடவே இருப்பார். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்” என கூறியிருனார்.





